கூகுள் சேவைகளுக்கு சீனாவில் தடை

30/11/2012 16:28

சென்ற நவம்பர் 9 அன்று, தொடர்ந்து பல மணி நேரத்திற்கு, தன் இணைய சேவைகளுக்கு, சீனா தடை செய்துள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் தன் சேவைகள் எப்படிச் சென்றடைகின்றன என்பதனை “Transparency Report” என்ற ஓர் இணைய அறிக்கை மூலம் கூகுள் அறிவித்து வருகிறது. (காண்க:https://www.google.com/transparencyreport/traffic/) அதில் இந்த தகவல் காணப்படுகிறது. சீனாவில் மேற்கொள்ளப்படும் இன்டர்நெட் பணிகளை மேற்பார்வையிடும் Greatfire.org என்ற முகவரியிலும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் தரும் தேடல் மற்றும் மெயில் வசதிகள் போன்றவை (Gmail, Play, Docs, Maps, and Analytics) முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டன. சீனாவைப் பொறுத்தவரை, அங்கு அதிகம் காணப்படும் தளங்களில், கூகுள் தளம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. 
கூகுள் தரும் வீடியோ வசதி, 2009 ஆம் ஆண்டிலிருந்தே தடை செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. மற்ற வசதிகளுக்கும் அவ்வப்போது தடை ஏற்படுத்தப்பட்டன. உலகில் அதிக ஜனத்தொகை கொண்டுள்ள சீனாவில், கூகுள் நிறுவன சேவைகள் தடுக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளாகவே, சீனாவுடன் அதன் தணிக்கை விதிகள் குறித்து கூகுள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. கூகுள் தேடல் தளத்தில் இடப்படும் சொற்களைத் தணிக்கை செய்திட சீனா உரிமை கேட்கிறது. ஆனால் கூகுள் அதனை ஏற்கவில்லை. இதனால், 2010 ஆம் ஆண்டில், சீனாவில் இயங்கிய தன் சர்வர்கள் அனைத்தையும், ஹாங்காங் நாட்டுக்கு கூகுள் மாற்றியது. சீன அதிகாரிகள் விதித்த தடைகள் இந்த நடவடிக்கைக்குக் காரணமாய் இருந்தன. மேலும், சீனாவில் இருந்துதான், பல ஹேக்கர்கள் இணைய தளங்களுக்குக் கெடுதல் ஏற்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டினையும் கூகுள் வைத்தது. சீன அரசாங்கத்தின் தணிக்கை விதி முறைகளைத் தாங்கள் ஏற்க முடியாது என கூகுள் நிறுவனத் தலைவர் அறிவித்தார்.
ஏற்கனவே, சீனாவில் YouTube, Google+, Twitter, Dropbox, Facebook and Foursquare ஆகிய நிறுவனங்களின் தளங்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளன.
சென்ற மாதம், நியுயார்க் டைம்ஸ் என்ற இதழின் இணைய தளத்தையும் தன் நாட்டில், சீனா தடை செய்தது. சீன நாட்டின் தலைமை அமைச்சர் குறித்து தவறான தகவல்களைத் தந்ததாக, சீனா குற்றம் சாட்டியது. 
(https://www.nytimes.com/2012/10/26/world/asia/chinablockswebaccesstonewyorktimes.html). அதே போல Bloomberg News என்ற இதழின் இணைய தளமும் தடை செய்யப்பட்டது. 
அதிக திறன் கொண்ட, இணையத் தடை செய்திடும் வசதிகளை சீனா உருவாக்கி வைத்துள்ளது. பல்லாயிரக் கணக்கான பொறியாளர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இன்டர்நெட்டில் தங்கள் நாடு, மக்கள் குறித்து வெளியாகும் தகவல்களைக் கண்காணித்து, உடனே அவற்றை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
சீனா மட்டுமின்றி, முன்பு செப்டம்பர் மாதம், ஈரான் அரசும் கூகுள் மெயில் சேவைக்குத் தடை விதித்தது. ஈரான் நாட்டின் அதிகாரிகள் பலர் இது குறித்துக் கேள்விகளை எழுப்பிய பின்னர், ஓரளவிற்கு மட்டும் தடையை நீக்கியது. ஈரான் சில வேளைகளில், இன்டர்நெட் முழுவதையும் தடை செய்து, தன் நாட்டிற்கு மட்டுமான நெட் சேவையினை இயக்கியது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் தலைவர்களை மாற்றும் சீன அரசாங்கத்தின் மிக முக்கிய கூட்டத்தின் போது இது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
மிகப் பெரிய அளவில் ஜனத்தொகை கொண்டுள்ள சீனாவில், கூகுள் தடை பெறுவது, கூகுள் நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியாக இழப்பைத் தரும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். விளம்பர வருவாய் பெருமளவில் இழக்கப்படும் என கணக்கிடுகின்றனர். இந்த கண்ணா மூச்சி விளையாட்டு எப்படி முடியும் என அனைத்து நாடுகளும் எதிர்பார்த்து வருகின்றன.